ஒரு துயரத்தை வதைத்தல்
பெருந்துயரொன்று உறவு கொண்டாடி வந்தது
திருவிழாவாக்கத் தீர்மானித்தேன்.
தீவுத்திடலுக்கு அழைத்துச் சென்றேன்
சந்தடியில் மிரண்டு கையை இறுக்க பற்றிக்கொண்டது
ராட்சத சக்கர ராட்டினத்தில் 40 ரூபாய் சீட்டு பெற்று அருகே இருத்திக்கொண்டேன்.. வானுக்கும் மண்ணுக்கும் உற்சாகத் தாண்டவம் வாய்விட்டு அலறியது.
அடுத்து மரணக்கிணறு
கைகொட்டிச் சிரித்தது இரண்டு சக்கரங்களும் எஞ்சினும் ஹேண்டில் பார் மட்டுமே இருந்த வாகனத்தில் பின்னிருத்திக் கொண்டு சாய்வான மரச்சுவர்களில் தடதட தடவென மரண யாத்திரை... இடுப்பை இறுக பற்றிக்கொண்டு காதருகில் கத்தியது...
’தயவு செய்து நிறுத்தி விடு...மூத்திரம் முட்டுது’ வெளியே வந்ததும் வாயிலெடுத்தது.
இன்னிசைக் கச்சேரியில் ‘அட்ராரா நாக்க முக்க...’
ஆட்டம்... பேயாட்டம்...சாமியாட்டம்...
தள்ளாடிய இரண்டு கால்களும் நடுநடுங்கின. மைக்கில் சொன்னேன் காதல் கவிதையொன்று...
உயிரின்றி வாழ்வேன்...துயரே நீயின்றி வாழ்வேனா?
அவ்வளவுதான்...
மதுக்குப்பியைக் கையில் திணித்துவிட்டு எகிறிக் குதித்து இருளில் ஓடி மறைந்தது ஓடிப்போனதை கொண்டு வந்து சீராட்ட நானென்ன மானங்கெட்டவனா? மதுவருந்த எப்போதும் ஒரு துயர் வேண்டுமெனக்கு இன்றைக்கு என் மதுக்குவளை தீர
பெருந்துயர் ஓடிப்போன சிறு துயர் போதும். மதுவருந்த எப்போதும் துயர் வேண்டுமெனக்கு இன்றைக்கும் நிம்மதியாக மதுவருந்தலாம்...

No comments:
Post a Comment